Sunday, January 24, 2010

இருபத்தியேழு : காலம் பற்றிய விழிப்புணர்வு


தினமும் காலையில் தியானம் செய்யும் போது .
1, யோகா உடல் பயிற்சி,
2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி,
3, ஓம் சாண்டிங்,
4, த்யாநித்தல்

இவைகளை செய்யும்போது நமது உடல் மன இருப்பை,
தண்டு வடத்தின் அடிப்பகுதியில் (மூலாதாரம்) இருத்தி,நிறுத்தி
(மேல் நோக்கி) பயிற்சி செய்தல் வேண்டும்.

நமது உடல்,மனம் இரண்டையும் அசத்திலிருந்து- சத்துக்கும்,
அக்ஞான இருளில் இருந்து- ஒளிக்கும்,
சவத்தன்மையிலிருந்து-உயிர்ப்புக்கும் எடுத்து செல்லுதல் வேண்டும்.

நம் உடல், மனம் முழுமையும், அந்த மூன்று நிலைகளான சத்து,ஒளி,உயிர்தன்மைக்கு மாற வேண்டுமானால்,

,-- ஆறு நிலைகளான அசத்து,சத்து,இருள்,ஒளி,சவம்,உயிர்(ஆறு நிலை)
இவற்றில் (உடலும்,மனமும்) கலந்து நின்றால் ,
நமது பயிற்சிக்கு வெளியே மனம் ஓடிக்கொண்டிருக்கும்.
உடலில் அங்கங்கே வலிதோன்றும்.

உடலையும், மனத்தையும் (மூன்று நிலை நோக்கி)
கவனம் பிசகாமல் தியானித்தல் வேண்டும்.

கவனம் பிசகாமல் என்றால்,

1, யோகா உடல் பயிற்சி இயல்பாகவும்,
உடல் அவயவங்கள் அனைத்தும் செயல் பட்டு பின் ஒய்வு நிலைக்கு வரவேண்டும்.
நல்ல ஒய்வு நிலையில் மட்டுமே இது கை கூடும்.

2, நாடி சுத்தி- மூச்சு பயிற்சி ,
நல்ல ஆழ்ந்த நீடித்த மூச்சு பயிற்சியில் உடலில் உள்ள அனைத்து செல்களும்,
முழு பிராண தன்மைக்கு கொண்டு வருதல் வேண்டும்.
( இது சரிவர செய்தாலே, ஒளித்தன்மையை மனதும், உடலும் உணர முடியும்.)

3, ஓம் சாண்டிங்-
பிரபஞ்ச மூலத்தன்மையான 'ஓம்' நாதம் இயல்பாகவும்,
ஆழ்ந்தும், நீண்டும்- உடலும் மனமும் ஒரு லயத்துக்கு வரும் வரை
செய்தல் வேண்டும்.
இந்த லயமே பின் வரும் தியானித்தலுக்கு,
அஸ்திவாரமாக அமைகிறது.
உடலில் உள்ள அனைத்து அணுக்களும் ஒரே லயத்துக்கு வருதல் அவசியம்.
இந்த ' ஓம் ' என்கிற நாதத்தை தவிர வேறு எதையும் அறியாத நிலை கூடுமானால்
அந்த லயம் உங்களுக்கு சித்தித்து உள்ளது என அர்த்தம்.

4, த்யாநித்தல் ; உங்களின் மூல இருப்பான தண்டு வடத்தில் அடி நுனியில்
-மூலாதாரம்- (மனதையும், இருப்பு உணர்வையும் இருத்தி)
பொருந்தி 'இருந்து',
சின் முத்திரையில் கைகளை வைத்து
புருவ மத்தியான 'ஆக்னா' வை நோக்கி ,
மூன்று நிலைகளான சத்து,ஒளி,உயிரை வைத்து த்யானிக்க,
சத்து,ஒளி,உயிர் மூன்றும் ஒன்றாகி இருப்புநிலையாக மாறி
ஆதி தூய இருப்பு நிலையோடு , உங்கள் இருப்பு நிலையும் கலந்து கூடி ஏகத்துவம் வாய்க்கும்.

உங்கள் மூல இருப்பு உணர்வும், ஆதி மூல தூய இருப்பு உணர்வும் கூடி ஒன்றாக கலத்தல் என்பது
'காலம்' என்பதை உங்களுக்கு உணர்த்தும்.

உபநிஷத்தில் நாம் ஏற்கனவே படித்த....,

-ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்-

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கிறது.
இரண்டும் ஒரே சாயலாக இருக்கிறது.
ஓன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
மற்றொன்று வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது.

பார்த்துக்கொண்டு இருக்கும் பறவை இயற்க்கைக்கு அப்பால்,
பற்றுகளில் சிக்கிக்கொள்ளாத, ஆத்மாவாக இருக்கிறது.
-- ரிக் வேத பாடல்.

ஒன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த பறவை உங்களது போருள்தன்மையான
அந்த ஆறு நிலைகளில் ( அசத்து,சத்து,இருள்,ஒளி,சவம்,உயிர்) சஞ்சரித்து கொண்டு
அசத்து,இருள்,சவம் எனும் மாயா நிலையான -
நேற்று, நாளை எனும் கற்பனை, அல்லது ஞாபக,
நிலையாகிய மாயா நிலையில் உள்ளது.

( இந்த நிலையே நமக்கு பரிச்சயமான நிலை.)
நாம் மனம் என்று இதையே சொல்லி வந்திருக்கிறோம்.

மற்றொன்று, வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது.
இந்த பறவையே
சத்தான, ஒளியான, உயிர்ப்பான, இருப்பான காலம். இக்கணம்,இக்கணம் .

(இது, நாம் இதுவரை பரிச்சயப்படாதது.)
அந்த 'ஞான நிலை' வாய்க்கும் போதே பரிச்சயப்படுவது.
(வெறுமனே நோக்கியவாறு (சாட்சியாக) அமர்ந்திருக்கிறது- என்பதின் சூட்சுமம், காலம்.)

ஜாக்கிரதை

இதில் எந்த பயிற்சியையும் நீங்களாகவே செய்தல் கூடாது.

இந்த நான்கு பயிற்சியுமே ஒரு ஞாணமடைந்தவரிடமோ,
அல்லது அவரது மேர்பார்வையிலேயோ தான் செய்யப்பட வேண்டும்.

வெறும் புத்தகத்தை படித்து விட்டு யோகா செய்து
பைத்தியம் பிடித்தவர் அநேகர்.

ஜாக்கிரதை.

ஏனெனில்,
உங்களது ஆதி துவக்கமான ஒரு செல் உயிரிலிருந்து
இன்று மனிதனாக பரிணமித்தது வரை உள்ள
உங்கள் இயல்பை ,மாற்றி
இன்று வேறு ஒரு தளத்துக்கு உங்களை எடுத்து செல்வதே
இந்த பயிற்சிகள்.

மிக்க கவனம் தேவை. கவனம், கவனம்.

Friday, January 22, 2010

இருபத்தியாறு : ஓஷோ


திருப்தி, போதும் எனும் உணர்வு ,பூரணத்துவம்
இவை
அதிர்ஷ்ட வசமாக அந்த ஆதாரம் வெளியில் எங்கும் இல்லை.

உங்களுக்குள்ளேயே அது இருக்கிறது.

நீங்கள் த்யானத்தால் அதை கண்டு கொள்ள முடியும்.
உங்களுக்கு நீங்களே போதுமானவராக இருக்கிறீர்கள்
இந்த உணர்வுக்கு, போதும் எனும் உணர்வுக்கு,
நீங்கள் வந்து விட்டதுமே அனுபவித்தல் - அனுபவிப்பதற்கான மனம்
அனுபவிக்கும் மனம்- மறைந்து விடுகிறது .

இருபத்தைந்து : எல்லைக்கு உட்பட்டதும்-எல்லை அற்றதும்.


இந்த உடல் எல்லையுடையது.
உலகில் உள்ள பொருள் யாவும் அது அதற்க்கு ஒரு எல்லையுடன் இருக்கிறது.
சத்து-அசத்து, இருள்-ஒளி, சவம்-உயிர், இந்த ஆறு நிலைகளுடனும்
கலந்து இருப்பது எதுவோ அது எல்லையுடையது.

தூய நிலையான மகாமனத்துக்கு எல்லையே இல்லை.
அந்த மகாமனம் எல்லையற்றது.
நீங்கள் எப்போதாவது எல்லையற்ற ஒன்றை தரிசித்ததுண்டா?
நமது மனமும் எல்லைகளுக்கு உட்பட்டே இது வரை சிந்தித்து வந்துள்ளது.
எல்லைகளுக்கு உட்பட்டு சிந்திப்பதுவே மாயா.
அந்த மனத்தை(அதன் பழக்கம்) எல்லை அற்ற மகாமனத்திடம் சேர்த்தால், - ( ஸ்ரீ ரமண மகரிஷி கருத்தில் சொன்னால், உங்கள் உப்பு கட்டியை (மனம்) அந்த எல்லையற்ற கடலில் (மகாமனம்) கரைத்து விடுங்கள்)-
நீங்கள் வேறு இந்த உலகு வேறு எனும் தற்போதைய,
மாயா எனும் நிலை மாறும்.

Thursday, January 21, 2010

இருபத்துநான்கு : சென்னை செந்திலுடன் ஒரு உரையாடல்.


1,ஒரு மனிதன் எப்பொழுது தான், ஞான உணர்வை அடைய முடியும்? இது உங்கள் கேள்வி.
எந்த மனிதனும் தானே ஞான உணர்வை அடைந்து விடுவதில்லை. ஞான தேடல் உள்ளவர்க்கே
இது சித்திக்கும்.
ஞான தேடலும் அவ்வளவாக யாருக்கும் இருப்பதில்லை.
இந்த வாழ்க்கை மீது சற்றாவது சுரணை உள்ள மனிதருக்கே ஞான தேடல் வருகிறது.
நான் என்பது என்ன? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? இறந்த பின் எங்கே போகிறேன்? இந்த பூமி, வானம், அண்ட சராசரங்கள், காலம், வெளி, இயக்கம் இதெல்லாம் என்ன?
என் மூலம் என்ன? நான் எங்கிருந்து துவங்கினேன்? இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு வந்தால்
உங்களுக்கு ஞான தேடல் இருக்கிறது என கொள்ளலாம். அல்லது,
தினமும் ருசியாக சாப்பிடுவது, நல்ல செக்ஸ் விளையாட்டு, உடம்பை சுகமாக (அதன் பழக்க சுபாவத்தை மீறாமல்) வைத்து கொள்வது , எங்கோ என்னவோ நடந்து விட்டு போகிறது என கவனமின்றி நடந்து கொள்வது, மொத்தத்தில் சோம்பலாக இருப்பது. சுய நலத்தை தவிர வேறு நோக்கமே இல்லாது இருப்பது. .................என்ன செய்வது இப்படி தான் எல்லோரும் இருக்கிறார்கள். அடுத்த கேள்விக்கு தொடர்ந்து பதில் எழுதுகிறேன்.
Reply



2,ஒரு மனிதனுக்கு ஞான தேடல் தீவிரமாக இருந்து,
சதா காலமும் தேடல் தீவிரமாகவும் சிரத்தையுடனும்
இருந்து
ஐம்புல உணர்வை தாண்டி ,
நமது தண்டு வட உணர்வான நமது மைய்ய இருப்பு உணர்வில் நமது கவனத்தை வைத்து,
நமது மனத்தை இந்த இருப்பு உணர்வில் நிலை நிறுத்தி ,
பிரபஞ்ச மைய்ய இருப்பு நிலையோடு ,
நமது மைய்ய இருப்பு நிலையை மனத்தால் பொருத்தி (எல்லோரும் மனத்தை கடந்து என்று சொல்கிறார்கள்) இருத்தி நிறுத்தினால் ,
நமது மைய்ய இருப்பும் பிரபஞ்ச மைய்ய இருப்பும் கலந்து
ஒரே இருப்பாக மாறுவதை காணலாம்.( அப்பொழுது மனம் தன சுய போக்கிலிருந்து மாறி அவனது ஆளுகைக்கு மாறுகிறது)
அந்த நிலையே பரிபூர்ண நிலை.
அதில் லயித்தவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது.
இதை நடை முறை படுத்துவது என்பது அவ்வளவாக சுலபமில்லை.
ஒரு மனிதனின் தீவிரத்தை பொறுத்தது அது.



3,மனம் என்பது மூன்று வித அடிப்படை கூறுகளில் செயல்படுவதாக தோன்றுகிறது.
சத்து, ஒளி, உயிர் என்பது அந்த மூன்றும்.
பிரபஞ்ச மனமும் இந்த மூலக்கூறுகளிலேயே இயங்குகிறது.
மனம் உடல்(பொருள்) சார்ந்த புலன்களின் வழியே செயல்படும் போது
சத்து-அசத்து., இருள்-ஒளி,. சவம்-உயிர்.
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
பிரபஞ்ச மன உணர்வும் பொருள் தன்மையில் இயங்கு நிலையில்
இந்த ஆறு நிலைகளில் கலந்து இயங்குகிறது.
இந்த அசத்து, இருள், சவத்தன்மை, நிழல் போன்றது. (இதுவே மாயா).
நாம் தியானம் செய்ய துவங்கும்போது ஒரு மந்திரத்தை சொல்லச்சொல்லி ஞானமடைந்தவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
ப்ருஹ தாரன்ய கோபநிசத்தில் இந்த மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது.

அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.

இந்த கோரிக்கையை இந்த உடலில் இயங்கும் மனம், பிரபஞ்ச மனதிடம் யாசிக்கிறது. ......தொடரும்.



4,நண்பரே,
நீங்கள், நான், இந்த உலகு,
அந்த வானம், அண்ட சராசரம், சூரிய குடும்பம், பால்வீதி மண்டலம், எல்லாமே மனம் தான். மகாமனம்.
அந்த மகாமனத்தின் ஒரு துளிதான் நீங்கள்,மற்றும் நானும்.
நம்மால் பொருள்(உடல்,மற்றும் புலன்கள்) சார்ந்து எண்ணமிட முடிகிறது.
அந்த எண்ணமே 'நான்' என்று எண்ண தொகுப்பு ஆகிறது.
நாம் தூய நிலைக்கு போக விரும்பினால்,
அங்கு அசத்து, இருள், சவத்தன்மை கிடையாது.
அங்கு சத்து, ஒளி, உயிர் என ஆதி இருப்பு நிலையேஉள்ளது.

Tuesday, January 19, 2010

இருபத்துமூன்று : ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இறை அநுபூதி.


ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன்னுடைய இறை அனுபூதியை
சீடர்களுக்கு பின் வருமாறு கூறியுள்ளார்.
"பரம்பொருளின் காட்சி கிட்டிய பொழுது
வீடு, கதவு, கோயில் அனைத்துமே மறைந்து விட்டன.
எங்கும் எதுவுமே இல்லாதது போல் தோன்றியது.
எங்கும் எல்லையற்று ஒளி பரவி இருக்க கண்டேன்.
எங்கு நோக்கினாலும் ஒளி வெள்ளம்.
எல்லா திசை களிலிருந்தும் ஒளி,
மிக்க வேகத்துடன் என்னை சூழ்ந்து கொண்டு ,
எல்லையற்ற பரம்பொருளில் ஆழ்த்தியது .
ஒளி வெள்ளத்தில் மூழ்கி திணறி வெளி உணர்வை இழந்து விட்டேன்.
வெளி உலகில் என்ன நிகழ்கிறது என்பதே தெரியவில்லை.
அன்றைய தினமும் , மறு நாளும் எவ்வாறு கழிந்தன என்பது தெரியாது.
ஆனால்,
என் உள்ளத்தில் அளப்பரிய ஆனந்தம் பொங்கி ததும்பியது.

இருபத்தியிரண்டு : ஞானம்


புத்தருக்கு
என்றைய தினம் ஞானம் ஏற்ப்பட்டதோ அன்று,
மக்கள் அவரிடம் வந்து 'உங்களுக்கு என்ன கிடைத்தது?' என்று கேட்டனர்.
அவர்;
"அதைகேட்காதீர்கள் நான் எதை இழந்தேன் என்று கேளுங்கள்". என்றார்.
அவர்கள் புத்திக்கு அது எட்டவில்லை.
"எங்களுக்கு விளக்கமாக கூறுங்கள்!" என்றனர்.
புத்தர்: எனக்கு கிடைத்ததே இருந்ததைத்தான் அடைந்தேன்.
எது, என்னிடம் இல்லாதபோதும் இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தேனோ ,
அதையே இழந்தேன் .
எது இருக்க வில்லையோ அதை இழந்தேன்:
எது இருந்ததோ ,அதை அடைந்து விட்டேன். என்றார்.

இருபத்தியொன்று :அருட்பிரகாசம்.


நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது.

அந்த நாடி நுனியில் புருவ மத்தியில் ஓர் சவ்வு தொங்குகிறது.

அதன் அடிப்புறம் வெண்மை,

மேற்புறம் மஞ்சள்.

அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறுவதும், இறங்குவதும்
அனுபவத்தால் விளங்கும்.

அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞான சபை.

அந்த பிரகாசத்துக்குள்ளிருக்கும் பிரகாசமே கடவுள்.

அந்த உள்ளொளியின் அசைவே ஞானாகாச நடனம்.

இருபது : வள்ளலாரின் வாக்கு.


அருவான பிரம்மத்தை அறிவோர் அறிக:

உருவாக அன்பு செய்வோர் அன்பு செய்க.

சுத்த பிரம்மம் உரை மனத்திற்கு எட்டாத பூர்ணம்.

மனோலயமான பின்பே பிரம்மானுபவம் எய்தும்.

மனம் சிறிது கிளம்பினாலும் ஆத்மா ஞானம் விளங்காது.

பிரம்மத்தை ஆத்மா ஞானத்தாலே அறியலாம்.

Monday, January 18, 2010

பத்தொன்பது : உபநிஷத்.


அஸத் தோமா ஸத் கமய -
தமஸ் ஸோமா ஜ்யோதிர்கமய -
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய .


1,அஸத் திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துச்செல்;

2,அக்ஞான இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச்செல்;

3, சாவுத்தன்மையிலிருந்து என்னை சாகாத தன்மையான ஞானத்துக்கு அழைத்துச்செல்.
----ப்ருஹ தாரன்ய கோபநிசத்.

Sunday, January 17, 2010

பதினெட்டு : யோனி


தாவர யோனி வழியே வந்து ,
ஊர்வன,
நீந்துவன,
பறப்பன,
ஆகியவற்றின் யோனி வழியே வந்து,
தேவ யோனி வர்க்கங்களான
பூதர்,
இராட்சசர் ,
அசுரர்
முதலியோர் யோனி வழியே கடந்து வந்து
மனித யோனியில்
ஒருவனது சுக்கிலத்துளியின் கண் ஒரு பகுதியில்
பேரணு உருவில்
வெளிப்பட்டு -

எத்தனை யோனிக்குள் புகுந்து,
புகுந்து
வெளிப்பட்டு மனிதப்பிறவி என்பதே கறைப்படுத்தப்பட்ட
பிறவி ஆயிற்றே என்று
வருந்திய ஞான சித்தர் ராமலிங்க அடிகள்
'இறந்திறந்தே இளைத்ததெல்லாம் போதும் இந்த உடம்பு'
என்று கண்ணீர் சொரிய பாடுகின்றார்.

பதினேழு : நிர்வாணா.


விளக்கை அணைத்து விட்டால்

ஏற்படுவது போன்ற

ஒன்றுமற்ற

சூன்யமான

ஒரு நிலை தான் நிருவாணம்.

என்கிறது ஹீனயான தத்துவம்.

நிர்வாணம் என்பது சூன்யம் அல்ல .

நிலையற்ற

இந்த பிரபஞ்சம் அனைத்துக்கும்

மூலாதாரமாயுள்ள

ஒரு உயர்ந்த நிலை என்கிறது

மகாயான தத்துவம்.

Saturday, January 16, 2010

பதினாறு : திகம்பர மகாவீரர்.


மகா சித்தரான ஸ்ரீ வர்த்தமான மகாவீரர் திகம்பர நிலை அடைவதற்கு ஒரு தத்துவார்த்த நிகழ்வே உந்துதலாக இருந்தது.
அன்று மார்கழி மாதத்து கிருஷ்ண பட்ச தசமி திதி.
இந்திரன் கொடுத்த தெய்வீக ஆடை மட்டுமே உடுத்தி தவம் செய்து வந்த
வர்த்தமானரிடம் சோமதத்தன் எனும் பிராமணன் தேடி வந்தான். தானம் வேண்டும் என்று இறைஞ்சினான்.
மகாவீரரிடமோ இடுப்பிலிருந்த இந்திரன் உடையைத்தவிர வேறு இல்லை. ஆயினும் எதுவும் இல்லை என்று கூற விரும்பாது அந்த ஆடையின் ஒரு பகுதியை கிழித்து கொடுத்தார் அவர்.

அதனை பெற்றுக்கொண்டு சென்று சோமதத்தன் ஒரு வியாபாரியிடம் அதற்க்கு பொருள் கேட்டான்.
தேவேந்திர உடையின் மகத்துவம் கண்ட வியாபாரி அந்த உடையின் மறு பாதியையும் கொண்டு வந்து கொடுத்தால் முன்னூறு தங்க காசுதருவதாக கூறினான்.

சோமதத்தன் மகாவீரரிடம் திரும்பி வந்து கேட்ட போது , மகாவீரர் தான் அணிந்திருந்த சிறு உடை மீதான பற்றையும் விட்டு விட்டார்.
அந்த ஆடையையும் கழற்றி கொடுத்து விட்டார். எந்த விதமான உடையுமே தீங்கு தான் பயக்கும் என்று அன்று முதல் திகம்பரரானார் மகாவீரர்.

கையில் திருவோடோ, ஏக தண்டமோ, திரிதண்டாமோ, எதுவும் அவர் வைத்திருக்கவில்லை.

அவர் உடல் முழுவதும் பூச்சிகள் ஊர்ந்தன, பூச்சிகள் அவர் உடலை கடித்தும் துன்புறுத்தின.
அவருடைய நிருவாண தோற்றம் கண்டு ஊராரும் அடித்து துன்புறுத்தினர். எல்லாவற்றையும் அவர் பொறுத்துக்கொண்டார்

நாட்கணக்கில் ,வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பசியும், பட்டினியுமாக இதே நிலை.

கண்ணையோ , உடம்பையோ தொட்டு சொறிந்தால் அதில் ஊரும் ஜீவன்கள் இறந்து விடுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்து விடுவார்.

சண்ட கௌசிகன் என்ற கொடிய நாகம் ஒரு நாள் வெகு தூரத்திலிருந்தே சீரும் சப்தம் கேட்டது. மகாவீரர் துளியும் அஞ்சாது நின்றார். கொடிய விஷம் பாய்ச்சி அது சினத்தோடு அவருடைய கட்டை விரலைக்கடித்தது.

'தம்பி சண்ட கௌசிகா!' 'உன் விஷம் என்னை ஒன்றும் செய்யாது. நான் சாக மாட்டேன். உன் காரியத்தால் தீவினை தான் பெருகும் .
உன் ஆத்மாவை கவனி . சக ஜீவா ராசிகளிடத்து அன்பு செய்' என்று அவர் கூறியதும் அந்த கொடிய விஷ நாகம், தலை கவிழ்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

Friday, January 15, 2010

பதினைந்து : இராமலிங்க அடிகளார்.


அடிகள் ஆவியோடியைந்த யாக்கையுடன் மறைந்த
அந்த புனித நேரம் 1874ஆம் ஆண்டு ஜனவரி30ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியாகும்.
மனித பிறவி எடுத்துவிட்ட எவரும் உடலோடு மறைவது சாத்தியமா?
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது தானே பெரியோர் வாக்கு.
அடிகளார் உடலோடு மறைந்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா என்று பலரும் ஐயுற்றனர்.
உலக நியதிக்கு மாறாக பருவுடலோடு வள்ளலார் மறைந்து விட்டார்
என்ற செய்தியே
வள்ளலார் ஒரு சித்த புருஷர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
அவரது முடிவைப்பற்றிய உண்மையை உணர வெறும் அறிவு மட்டுமே போதாது.

"என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று பாடியவர் வள்ளலார்.
வள்ளலார் கூறும்போது சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியை தெரிவிப்பதே அன்றி வேறில்லை.
சாகின்றவன் சன்மார்க்க நிலையை பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி". என்று வலியுறுத்துகிறார்.

Saturday, January 9, 2010

பதினான்கு : எண்ணிலடங்கா மதங்கள்.


உலகில் இன்று நிலவி வரும் பதற்றங்களுக்கும்,
தீவிர வாதத்திற்கும் , இனப்படு கொலைகளுக்கும் ,
பொருளாதார சுரண்டல்களுக்கும் பின்னணியில் , காண கிடைக்காமல் ஒளிந்து கொண்டிருப்பது மத உணர்வுகளே!.

இது வரை மண்ணில் தோன்றி ஞானநிலை நிலை அடைந்த மகான்கள் அனைவருமே கண்டது ஒன்றை தான்.

அதுவே இறுதி நிலை சத்தியம். அதற்க்கு மேலுமோ, அப்பாலுமோ பிரிதொன்று இல்லை. இதை அனைவருமே கூறியுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க, எண்ணிலடங்கா மதங்கள் தோன்ற காரணம் என்ன?

மூல சத்தியமான -பரபிரம்மம்-தூய இருப்புநிலை-இறைநிலை- இன்னபிற -இதை தவிர மற்ற அனைத்தும் மாயையே. ( மாயை: நிலையற்ற தோன்றி மறையக்கூடியது.) இதுவும் அனைத்து ஞானியரும் கூறியது தான்.

மதங்கள் அனைத்துமே இந்த மாயை எனும் நிழலால்தான் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மை நிலை ஞானமடைந்த ஞாநியர்களுக்கு தெரியாமலா போனது?

ஞாநியர்களுக்கு தெரிந்தே இருந்த்தது என்றால் ஏன் இந்த உண்மையை உலகுக்கு பிரகடனம் செய்யவில்லை?

அவர்களை தடுத்தது எது?

இன்னும் சில மதங்களில் கடவுள் எனும் மாய நிழலால் மதங்களை நிலை நிறுத்தி உள்ளனர்.
..........................மீண்டும் இது பற்றி பேசுவோம்.

Saturday, January 2, 2010

பதிமூன்று : வேடிக்கை 2

உனது வலது கரத்தை தூக்கி அதில் உள்ள பெரு விரலையோ , ஆட்காட்டி விரலையோ, நீட்டவோ, மடக்கவோ, சொடுக்கவோ முடிகிற மாதிரி--

உனது கண்களை மூடவோ,திறக்கவோ,உருட்டவோ, உன்னித்து பார்க்கவோ முடிகிற மாதிரி--

உனது நாவை மடிக்கவோ,புரட்டவோ, ருசி பார்க்கவோ முடிகிற மாதிரி--

உன்னை சுற்றி எவ்வளவோ சப்தங்கள் கேட்டாலும், ஏதோ ஒரு சப்தத்தை மட்டும் பிரித்து உணர்ந்து பார்க்கிற உனது காது மாதிரி--

உன் வீட்டு சாம்பாரில் மணப்பது அதில் உள்ள பச்சை மிளகாயா? கறிவேப்பிலையா? கடுகா? என பிரித்து பார்க்கும்
உனது மூக்கு மாதிரி--

உனது ஆறாவது புலன் ஆன-தூய இருப்பு நிலையை உணரும் -அறிவையும் சுலபமாக உணர முடியும்.

என்ன---
மேற்கண்ட ஐந்து புலன்களையும் அறிந்து அதை பழக்கி வைத்துள்ளோம்.
ஆறாவது புலனை அறியாமல் விட்டு வைத்திருக்கிறோம்.
இனியாவது

ஆறாவது புலனை சிறுக,சிறுக அறிய முயல்வோம்.

பன்னிரண்டு : வேடிக்கை 1

நீ இங்கு வந்திருக்கிறாய்!

உனது உடல் ஆரோக்கியம்

உன் சுற்றத்தில் நீ உருவாக்கி உள்ள உன் இமேஜ்

உன் மனைவி( அல்லது கணவன்)

உன் தாய்

உன் தகப்பன்

உன் குழந்தைகள்

உன் குடும்ப அமைப்பு

உன் பங்காளிகள்

உனது உறவினர்கள்

உனது ஜாதி--ஜாதிய அமைப்பு

உனது மதம்--மத அமைப்பு

உனது மொழி

உனது இனம்

நீ உறுப்பினராக உள்ள கட்சி

உனது நாடு

உனது தொழில்

நீ பாதுகாப்பாக நீடித்து உயிர் வாழ்வதற்கான -உன்னைப்போன்ற உனது முன்னோர்கள் கண்ட ஏற்பாடு- அதை திறம்பட
அமைத்துக்கொண்டு விட்டாய்.

உனக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கவலையில்லை.

இன்னும் ஒரு வருட உணவுக்கு பஞ்சமில்லை.

ஏன்--

உன் ஆயுளுக்கும் உணவு பஞ்சமே வராமல் ஏற்ப்பாடுகள் செய்து இருக்கிறாய்.

அது மட்டுமா?

உன் வாரிசுகளின் ஆயுத காலத்திற்கும் , அவர்களுக்கும் உணவு தட்டுப்பாடே ஏற்படாத வகையில் சொத்துக்களை
சேர்த்து இருக்கிறாய். ( உனது கனவிலும், கற்பனையிலும் உள்ள உனது வாரிசுகளுக்கும் கூட) .

ஆனால்

நீ

நீ

வந்த வேலையை மறந்து விட்டாய்.